பூ விழி

ஆகஸ்ட் 30, 2008
பூ விழி

பூவிழிக்குள் விழுந்தபிம்பம் கோடி - உன்
பொன்உருவம் போல வரு மோடி ?
பாவழிக்குள் வந்து தடம்
பதித்தவளே பதம் முழுக்கக்
கூவிளமும் கருவிளமும்
கொள்ளைஎனத் தருபவளே
நாவழியே நடந்த உனை நாடி - புகழ்
நாட்டிடவோ நல்லதமிழ்ப் பாடி ?

கோபம்எலாம் ஏனடியோ கொள்ளை - உளம்
கொண்டுநின்று மிழற்றுகிற கிள்ளை
தாபமுடன் தவிக்கிறது
தான்அடங்க மறுக்கிறது
ஞாபகமோ நீவிதைத்த
நடவுக்குள் விளைகிறது
தீபவிழி பாய்ச்சுதடி கள்ளை - அதில்
திளைக்கின்றேன் தீருதடி சள்ளை

காட்சிஎலாம் தருவதற்கேன் காலம் - மிகக்
கடத்துகிறாய் நிலைமைஅலங் கோலம்
ஆட்சிஎலாம் மதுரையிலே
ஆள்வதனால் என்னபயன்
மாட்சிமையாய் அரசாள
மனதேசம் விற்பனைக்குப்
போட்டுவைத்தேன் அன்புமட்டும் போதும் - அது
பொன்விலைக்கு நேர்விலைஎப் போதும்

கச்சிறுக்கும் கலசமது் ஆடும் - அதில்
கனகமணிச் சரமிரண்டு பாடும்
பச்சைஒளிக் கிரணம்எனைப்
பற்றிஉயிர்ப் பாகவரும்
உச்சிமுதற் பாதம்வரை
ஊறிடுந்தீம் பாகுவரும்
துச்சமென உலகமெலாம் தோணும் - இவள்
சொல்லுவதால் பிறக்குதிந்த ஞானம்.

மேகலையில் ஆடிவரும் நாதம் - தான்
மேதினியி லேஎனக்கு வேதம்
யோகநிலை காட்டுவதும்
உச்சரித்துப் போற்றுவதும்
மோக ஒளிச் சோதிஇது
முன்புவரக் காணாமல்
போகுமெனில் என்னுரைப்பேன் தாகம் - இவள்
பூங்கரத்துள் சிக்குறுதல் போதும்

சுற்றியுளோர் எண்ணமெலாம் சூழ - நான்
சோர்வுறவா வாழுகிறேன் தாழ
வெற்றியுடன் வளைந்திடும் திக்
விசயமதில் உனக்கிணையாய்
உற்றிடுநாள் என்றுகொலோ
ஓதடியோர் வார்த்தைஎன
பற்றுகிறேன் பாசவெறி மூள - எனை
பாகமென ஆக்கிவிடு ஆள
கண்டகண்ட மடமனிதர் மத்தி - இதில்
காணுதிலை அந்தரங்க சுத்தி
கொண்டதெலாம் குறையாகக்
குற்றுயிரோ குலையாக
பிண்டமட்டும் அலையுதடி
பிணமாகத் திரியுதடி
தெண்டனிட்டேன் உள்ளம் எனும் புத்தி - நின்
சேவடிக்குள் ஆக்கிவிடு பொத்தி

பார்ப்பவரின் கண்வலைக்குள் பட்டு - மிக
பரிதவிப்பில் ஆளுகிறேன் கெட்டு
மூர்த்தணிய மாகவரும்
மோகவெறி யாகமனம்
ஆர்த்தெழுங்கால் அடக்கடியோ
அடைக்கலநின் சேவடியோ
தீர்தெழுங்கா லம்எதுவோ தொட்டு - நின்
திருக்கரத்தால் வைஇரண்டு கொட்டு

மனக்குழப்பம் அதிகரிக்கும் தோஷம் - இதில்
மாட்டியவன் பாடுமிக மோசம்
தினக் குழப்பம் தீரவிலை
சேர்ந்தவரின் திருஷ்டியிலே
வனக் கிளீ நான் வாடுகிறேன்
வருத்தமுடன் பாடுகிறேன்
கனக்குதடி நான்நடிக்கும் வேஷம் - இதில்
காணுதிலை எங்கேசந் தோஷம்

சுற்றியவர் வீச்சுகளில் சொக்கி - நான்
துடிதுடித்தேன் மாயவலை சிக்கி
எற்றுதைக்க ஏலுதிலை
இல்லைஎன ஆகுதிலை
முற்றியதோ தீரவிலை
மோகவலை மோகவலை
வெற்றுயிராய் உனதடியே விக்கி - நான்
வீழுகிறேன் விஷம்எல்லாம் கக்கி